Thursday, 13 March 2014

வண்ணப் பொய்.

வண்ணப்பொய்!

என்னை நான் அறியவும் இன்னும் புரியவில்லை
உன்னை யேன்  புரியவும் உணர்கிறேன் அறியவில்லை.
கண்ணை நான் கேட்கிறேன் காண்ணாடி முன்னே
என்னை நான் பார்க்கிறேன் என்ன தான் கண்ணே?

யாருக்கும் யாரும் நேரென்றும் இல்லை
பேருக்குப் பேரும் பொருளொன்றும் இல்லை.
அவரவர் தானே அவரவர் ஆவார்
அடையாளம் ஒன்றில் அவராகியிருப்பார்.

அடித்தாலும் அணைத்தாலும் அழியாது தடமே
படித்தாலும் தடித்தாலும் பழகாது இடமே
இயல்பான குணமொன்று எப்போதும் நிசமே
அயலான பயிற்சியெல்லாம் அமையாது வசமே!

கல்வியென ஒன்றது கருத்துக்குத் தெளிவுதான்.
சொல்வதில் கண்டதுவும் சுயத்திற்கு அறிவுதான்.
தன்னிலை என்பதில் பின்னிலை நேராது.
ஒன்னிலை ஒருவற்குள் என்னிலையும் மாறாது.

நாயெனப் பிறந்ததை நன்றிக்கு நம்பலாம்`
நரியெனப் பிழைப்பதைத் தந்திரம் எண்ணலாம்.
பாயும் புலிகண்டும் உயிர்காக்க ஓடலாம்.
பொய் வண்ண மனிதனிடம் என்னவென்றும் தப்பலாம்?

சொல்லினில் வருவதை சுயமென நம்புவது
கல்லினில் விளைவதைக் கதையெனச் சொல்வது
உள்ளிருக்கும் உள்ளதை உதடுகளில் மறைவதை
சொல்லெடுக்கக் கற்றவரார்?
முள்ளெடுக்க உற்றவரார்?

புரியாத புதிரொன்றும் புவியினில் உண்டென்றால்
குறியிலாப் படைப்பொன்றும் குறிப்பிடக் கூடுமென்றால்
அறிந்திட விளங்காத அதிசயம் ஒன்றென்றால்
தெரிந்திட மனிதெனென திரிந்திடும் இனமன்றோ!

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment