அழகென்றால் .............!
அழகென்ற சொல்லுக்குப் பொருளென்ன ?
அதையளந்தவன் சொன்னவன் பேரென்ன?
நிலையாய் நெஞ்சில் நிற்பதெல்லாம்
அழகே என்றால் சரி தானோ!
கவனம் ஒன்றில் கவரும் என்றால்
காண மீண்டும் ஈர்க்கு மென்றால்
யவனம் அதுதான் பொருளென்றால்
சிவப்பு நாவு செந்தீயும் அழகன்றோ!
முழுமை பெற்ற சிறப்பெல்லாம்
அருமை என்று மனம் மகிழ்ந்தால்
அறிவின் வெற்றி அது வென்றால்
அதுவும் அமைதி அழகன்றோ!
கண்டதில் மேன்மை கொண்டதுதான்
கொண்டதில் நன்மை என்றதுதான்
உண்டதில் சுவையும் உயர்ந்ததுதான்
நின்றது அதுவே அழகன்றோ!
ஆடும் கடலும் ஓடும் நதியும்.
வீசும் தென்றல் கூசும் பனியும்
மேடும் முகிலும் கூடும் விதமும்
ஆசை அசைவில் அழகன்றோ!
வாசம் வண்ணம் நேசம் நெகிழ்ந்தால்
பேசும் எண்ணம் பாசம் திகழ்ந்தால்
மலரும் மொழியும் மனது நிறைந்தால்
புலரும் இரவும் அழகன்றோ!
.
மென்மை என்றால் பெண்மையே!
இன்மை சொர்க்கம் காதலே!
மென்மை பெண்மை இன்மையில்
என்றும் அதுவே அழகன்றோ!
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment