நம்பினால் நம்புங்கள்!
என்னாலிது முடியுமென
எண்ணித் துணிந்து
பின்னாலிது நேருமோவென
பின்னித் தயங்காது
முன்னேற முயல்வது
நம்பிக்கை.
அன்னாளில் எவரோ
சொனாரென்றே மயங்கி
தன்னில் நம்பாது
முன்னில் தோன்றுவதஞ்சி
பின்னேறித் திரிவது
மூடநம்பிக்கை.
இறைவன் என்பவன்
இருக்கின்றான் என்பதும்
இறைவன் இருந்தால்
நல்லதுதான் என்பதும்
இருவேறான அவரவர்
நம்பிக்கை.
இதிலெது சரியென்று
வாதிட முனைந்து
பதிலுக்குப் பதிலாய்
சாட்சிகள் புனைந்து
மதிப்பிட விழைவது
மூடநம்பிக்கை.
எவரெவர்க்கு எதெது
சரியோ அதை
அவரவர்க்கு உரியதாய்
புரிந்தே மதித்தால்
நன்மையே!!
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment