பயணம் தூரமோ!
எங்கே பயணம் என்னும் வினவலோ!
மங்கும் மொழியாய் மனதும் தயங்குமே!
நொங்கும் பார்வையும் நோங்கும் விதத்திலே!
இங்கிதம் இல்லையே என்பதைச் சொல்லுமே!
பயணம் தூரமோ பத்திரம் பத்திரம்.
அயனம் தோறும் அமையட்டும் நேத்திரம்.
பயணம் வாழ்த்திடும் பக்குவம் இத்திறம்.
வயணம் கூறிடும் வாய்மொழி சூத்திரம்.
வெளியே பயணம் நலமே யாகத்தான்
வழியே முன்னம் சகுனம் பார்க்கத்தான்
தாயுள்ளம் ஓடியும் வாயிலை சோதித்தும்
போய்வா மகனென வாய்மொழி சொல்லும்.
மனைவி மக்கள் நினைவில் நின்றும்
நினைந்தும் உன்னில் அன்பினி லென்றும்
உனையே நம்பும் உயிராம் உனைத்தான்
நனைந்தும் அனுப்பும் நாளினை நினைக!
பத்திரம்! பத்திரம்! பலமுறை சொன்னதும்
முத்திரை பதித்தாயோ முன்நெஞ் சிலதனையும்!
பத்திரம் எண்ணா படிக்கட்டுப் பயணமோ!
உத்திரவாதம் தானோ உணர்ந்தும் அறிவாயோ.!
அவசரமும் வேண்டாம் அடுத்துத்தான் வாராதா?
அதுவரையும் பொறுத்து அடைவதும் நேராதா?
சுபவரம் வேண்டியும் சுற்றமும் தேடாதா?
அபத்தமும் உன்மனம் ஆவதும் எண்ணாதா?
எத்தனைதான் வல்லுனரும் இருப்பரோ உம்மிலேயும்!
எத்தனைதான் செலவளித்தும் இந்தியாவும் காத்திருக்கும்!
அத்தனையும் வீண்போக்கி ஆவதென் னவசரத்தால்
பத்திரமாய் போய்வாரீர் பல்லுயிர்க்கும் காப்பு நீவீர்!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment