வாழ்க பத்திரம்
வதந்தியும் ஒருநாள்
வாய்மை ஆகலாம்.
கதைகளுங்கூட
காட்சிகளாகலாம்.
சத்தியமதுவும்
புத்தியும் மாறலாம்.
பத்தினி அவளும்
சத்தியந் தவறலாம்.
நித்தியமில்லை
நிலையற்ற வாழ்வில்
பத்திரமாய் வாழ
பழகிடப் பழகு!
உத்தமம் ஆவது
உனக்குள்ளிருக்கு.
பத்தியக் காந்தியின்
பாதம் தொடர்க!
பிறர்க்கின்னா செய்யாது
பிழைபட வாழாது
பிறப்பது உலகின்
பேரெனக்கொண்டு
உறுதியில் நின்று
உண்மையை மதித்தால்
பெறுவது திண்ணம்
பிணியிலா வண்ணம்.
எப்படியும் வாழலாம்
என்பதை விடுத்து
இப்படித்தான் வாழ்வு
என்பது உணர்ந்து
அப்படி வாழ்ந்தால்
அகிலத்திற்கு சுகமே!
செப்படி இதுவே
சீர்பட உலகு!
சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment