Monday, 17 February 2014

உழவன்

உழவன்.!

வெயிலிற் காய்ந்தவன் வேர்வை நனைவான்
உழவன் உலகின் முதல்வன்.


உயிர்களைக் காப்பான் உணவை கொடுப்பான்
உழவன் உலகின் அச்சு.

உண்டும் அளித்தும் உலகினைக் காக்கும்
உழவின் பின்னது மற்று.

வறுமை வெயிலது 
வாட்டாது வண்ணம்
வையம் காக்கும் உழவு.

உழைத்துத் தான் உண்டு ஒளித்தும் பிழைக்காது
ஊழிற் குதவும் உழவு..

சோர்ந்து உழவது 
வீழ்ந்து கிடந்திட்டால்
தீரும் உலகின் உயிர்.

மண்ணும் புழுதியாக 
பேணி உழுதிட
பின் னெதற்கு உரம்.

ஏரோட்டி எருவிட்டு 
நீரிட்டுக் கட்டப்பின்
காத்தலினும் பாடே சிறப்பு.

தினந்தினம் பேணவே மனையாள் சிரிப்பாள்
நிலமும் மனையாள் போல்.

கட்டமோ நட்டமோ 
எண்ணிக் கலங்கினால்
கொட்டி நகுவாள் நிலம்.

வள்ளுவன் போற்றிய உழவனின்று
வாடுகின்றான் நீரின்றி
வரப்பில் நின்று கதறுகிறான்
கருகும் பயிரது நிலை கண்டு
தாங்கா மனதில் ஏங்குகிறான்
தற்கொலை செய்தும் மடிகிறான்
பிள்ளையாக வளர்த்தவனுக்கு
பேரிழப்பன்றோ என்செய்வான்.
காவேரித்தாயும் துடிக்கின்றாள்
கைதாகிவிட்டாள் பாவமவள்.!

கொ..பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment