Monday, 17 February 2014

தூங்க மனம் கூடவில்லை.

கோணல் ஆன வண்ணஜால வில்லொன்று
வானம் முட்டி வளைந்துதான் கிடக்குது.
நானதை நிமிர்த்தலாம் என்று தானே
தூண் கொண்டு ஓடியோடித் தேடுகிறேன்.

அடைப்பட்டக் கடல் ஒன்று விடுவென்று
ஆகாயத்தில் கண்நீரைச் சிந்து தென்று .
உடைத்துமே மீட்டெடுக்க வெட்டி கொண்டு
உந்துஞ் சிறகு வேண்டித்தான் பாடுகிறேன்`

கோடிகோடி சக்தி கொண்ட மின்னல்கள்
கூடாமல் வீணாகித் தான் தொலையுது. 
கூட்டியதைக் கொண்டு வந்து ஒளிதர
கோட்டி யானை மதமாகி அலைகிறேன்.

பகல்வருஞ் சூரியனைப் பிடித்து வைக்க
திகார் சிறைப் பார்த்து வரப்போகிறேன்.
சகலமும் அவனால் சாதிக்க முடியுமென
புகல்வது அறிகிறேன் நிகழவழி வரிகிறேன்.  

நிலவும் கூட நிலையின்றி முறையின்றி
அழகு வதனத் தலைக்கனத்தால் அடக்கமின்றி
திரிவதை வழிமறித்து திருத்துமொழி நானுரைத்து
வருத்துவழி யாதெனவும் ஆய்ந்துமே வருந்துகிறேன்.

எத்தனைக் கோடிகள் முத்தொளி வைரங்கள்
அத்தனையும் பயனின்றி விண் மயங்கி
இருந்தும் இல்லாமல் பொருந்தாத விண்மீன்கள்
இரக்கியவை ஒளிபொழிய என்னவழி யோசிக்கிறேன்.

விரிந்து கிடக்கும் கடலைக் கண்டால்
புரிந்து கொள்ள முடியவில்லை.ஆனாலும்
தெரிந்து கொள்ள கடலொன்று சொன்னது

அறிந்துதான் உப்பானேன் ஆராய்ந்து தேடென்றது

எமக்குத் தந்த இயற்கைச் செல்வங்கள்  
எட்டி நின்றே ஏய்த்து எம்மை
ஏங்க வைத்தும் வதைப்ப தென்ன?
தூங்கமனம் கூடவில்லை புதுமை செய்வோம்!
   
கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment